மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்
அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேசச் செயலர் பிரிவின் கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது.

மானிப்பாய் (Manipay)

மானிப்பாய் (Manipay) யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரியபுலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பிரிவில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும்
மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.

வரலாறு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் சித்திரைப் புத்தாண்டு அன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறும்.
அக்காலத்தில் மானிப்பாயில் மக்கள் தம் கையாலேயே பாகம் செய்த பொங்கல், மோதகம், நெய்வேந்தியங்களை ஏற்று மருதமரத்தின் கிழக்குத் திசையிலேயே பிள்ளையார் பிரதிட்டையாக இருந்ததாக கர்ணபரம்பரையாக அறியப்படுகிறது. இக்கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக்கூடியதான முதல் ஆவணம் பிரித்தானிய இலங்கைக் காலத்தில் ஏற்பட்டதாகும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்காக இக்கோவிலுக்கான காணியை 1856ம் ஆண்டு விக்டோரியா மகாராணி வழங்கினார்.
அவர் நிறைவேற்றிய 35ஆம் இலக்க லிகித சாசனத்தின்படி பிள்ளையார் கோவிலுக்கு அண்ணளவாக 7 நெல் பரப்புக்காணி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு பிள்ளையார் திடல் என்ற பெயரிடப்பட்டது. இதற்கான வரைபடத்தை அக்காலத்து பெருந்தெருக்கள் திணைக்களப் பொறியியலாளர் கென்றி பயிறே என்பவர் தயாரித்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த குமாரசிங்கம் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
இப்பதவிக்கு நியமிக்கப்படுபோர் கோயிலை மேற்பார்வை செய்ய வேண்டும் என மகாராணியாரின் சாசன வாகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் பிற்காலத்தில் இது தனியார் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது.

போர்த்துக்கேயர் காலம்

போர்த்துக்கேயரின் காலத்தில் கிராமக் கோயில்களை இடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிரகங்களையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்தார்கள். இவ்வகையில் இடிக்கப்பட்ட கோவில்களில் மானிப்பாய் பிள்ளையார் கோவிலும் ஒன்று என்று கூறுவர்.
போர்த்துக்கேயர் பறங்கியர் இக்கோயிலை இடித்து இவ்விடத்தைச் சவக்காலையாக்கி விட்டனர். முன்னைய மருதமரத்துப் பிள்ளையார் தோற்றம் சவக்காலையும் மயானமும் இப்போது கோயிலிருந்து ஏறக்குறைய நூற்றிருபத்தைந்து யாருக்கப்பால் ஆலயத்தின் மேற்கு வாசலின் நேர்திசையிலுள்ளது.
இது நிற்க, பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள்.
இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளி வீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே கற்புரமெரித்து மருதத்தழிரைப் பறித்துக் கண்ணில் ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்து கொள்வதை காணலாம். யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதல் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப் பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம்.

ஆலய தோற்றம்

ஒல்லாந்தர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நடந்த ஓர் இராச கலகத்திற்கஞ்சி அனேக வேளாண் குடும்பத்தவர் புறப்பட்டு வந்து வட்டுக்கோட்டை, காரைநகர் முதலிய இடங்களில் குடியேறினர்.
இவர்களில் தியாகராசக் குருக்களென்பவர் நவாலி வயல்களிலிருக்கும் தூக்கிணி வைரவர் கோலடியில் வந்து தங்க நேரிட்டது. இவர் சைவசித்தாந்தம் முற்றும் கற்றுணர்ந்தவராவார். இத்தூக்கிணி வைரவர் கோயிலிலிருந்து ஒரு வருடம் வரையிற் சிவபுசை செய்துவரும் நாட்களில், இக்கோவிலில் ஆண்டுதோறும் நடந்துவரும் வைரவ மடையிலிம், வேள்வியிலும் பெருந்தொகை ஆடுகள் வெட்டப்படுமென்று கேள்விப்பட்டார்.
இதனால் அப்பெரியவர் அவ்விடம் விட்டு நீக்கிக் கீழ்த்திசை நோக்கிச் சென்று மானிப்பாய் மருதச் சோலையை அடைந்தார். இச்சோலைக்கு அணித்தாயுள்ள காணிகள் மானியம்பதி சுவாமிநாத முதலியாருக்குரியது.
மருத மரங்கள் நின்ற சிலமும் பக்கத்திலுள்ள குளமும் ”முக்கோணத்திடரும் பிள்ளையார் குளமும்” எனப் பெயர் வழங்கலாயிற்று.

திருப்பணி வேலைகள்

ஆங்கிலேயர் காலம் உதயமானதும் மதப் பைத்தியங்கொண்ட பறங்கிக்காரராலும் ஒல்லாந்தராலும் கொடிய தண்டங்களை அனுபவித்த எமது யாழ்ப்பாண புத்திரர்கள் சமய சுயாதீனம் பெற்றர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் மருதடியாலயம் அதி உன்னத மகத்துவ மேம்பாடுகள் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
கோயிற்றிருப்பணி வேலைகள் தர்மசீலராயும், விநாயகரடியவராயும் விளங்கின. பெரியவர்களுடைய பரோபகாரங்களினால் நடைபெற்றன.
விநாயகரின் கர்ப்பக்கிருக தூபியும், அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் ஸ்ரீமான் பொன்னம்பலச் சிறாப்பரவர்களாலும்,
சபாமண்டபம் ஸ்ரீமான் மண்டலத்தாரவர்களாலும்,
ஸ்தம்பமண்டபம் ஸ்ரீமான் இரகுநாதமுதலியார் சின்னத்தம்பியாரவர்களாலும்,
சிவன்கோயில், நடராசர் கோயில், அம்மன்கோயில்கள் ஸ்ரீமான் தன்மாவரதர் முத்துத்தம்பியவர்களாலும்,
முற்போபுரம் ஸ்ரீமான் தம்பையா முதலியவர்களாலும்,
மடைப்பள்ளி, வாகன மண்டபம், தெற்குமானியம்பதி ஸ்ரீமான் மருதப்புரவர்களாலும்,
வசந்த மண்டபம் வைரவ ஆசாரியாலும்,
வசந்த மண்டபக் கொட்டகை வட்டு நகரிலுள்ள சில புண்ணியவான்களாலும்,
தேர்மூட்டியும், இரதமும் ஸ்ரீமான் இரகுநாதய முதலியார் சின்னத்தம்பியாரவர்களாலுஞ் செய்விக்கப்பட்டன.
பின்பு கீழைக்கோபுரம் ஸ்ரீமான் செல்லப்பா வைரமுத்து அவர்களாலும்,
பொங்கல் மண்டபக்கொட்டகை ஸ்ரீமான் வன்னியசிங்கம் தம்பிப்பிள்ளையவர்களாலும்,
திருநந்தனவதனம் ஸ்ரீமான் ம.சிவப்பிரகாசமவர்களாலும்,
திருமஞ்சணக்கிணறு புதிதாய் ஸ்ரீமான் முருகேசமுதலியார் பொன்னுச்சாமியவர்களாலும், v தீர்த்தக்கிணறு ஸ்ரீமான் முருகேசர் வினாசித்தம்பியவர்களாலும் உருவாக்கப்பட்டன.

கோயிற் பூசகரும் தருமகர்த்தாக்களும்

தியாகராசக்குருக்கள் இல்லறம் நடத்தவெண்ணி ஆவரங்காலிற் சைவச்செட்டி வேளாண்குடும்பத்தில் ஓர் பெண்ணை விவாகம் செய்து குமரகுருபரர், வெற்றிவேலர் எனும் இருவரைப் பெற்றனர்.
வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரை அவர்கள் இன்றைக்கும் மானிநகரில் வசிக்கின்றார் மேற்கூறப்பட்ட வெற்றிவேலருடைய பௌத்திரனே சிவபூசா ஒழுக்கங்களிற்றவறாத ஸ்ரீமான் செல்லயாரவர்கள்.
ஆங்கிலேயர்காலமுதயமானதும் சந்தான விர்த்தியுடையராய் விளங்கியவரும், விக்கினேசுரப் பெருமானின் தொண்டு பூண்டு குருத்துவம் புரிந்த புண்ணியோத்தமஐமாகிய தியாகராசர் இம்மண்ணுலக வாழ்க்கையை விட்டு விண்ணுலகில் விநாயகர் மூர்த்தியின் திருத்தாளெய்தினர்.
ஆலய பூசா கருமங்கள் அவரது சிரேஷ்ட புத்திரன் வெற்றிவேலையரால் நடைபெற்று வந்தன. கோயிற்காரியதரிசி சுவாமிநாதமுதலியாரும் சிவபதமடைய, அவருடைய மகன் வலிகாமம் மேற்கு மணியகாரனாய் விளங்கிய குமாரசிங்கமணியமென்பவர் கோயில் மணியகாரனாயும் விளங்கினார்.
இவருக்குப் பின் இவரது புத்திரர்கள் ஸ்ரீமான் டாக்டர் சுவாமி நாதபிள்ளையவர்களும் இராசகாரிய உத்தியோகம் நடாத்திய ஸ்ரீமான் இராசகாரியவர்களும் கோயிற்காரியங்கள் பார்த்து வந்தனர். பின் இவர்களின் பிள்ளைகள் சுகாதார பரிசோதகர் ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களும் ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களும் தருமகர்த்தாக்களாய் விளங்கினர்.
ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்கள் ஆலயத்திற்கு அனேக நன்மைகளைச் செய்திருக்கின்றார். அவைகளிலொன்று, தெற்கு வீதியிலிருந்த அரசாட்சி யாருக்குரிய குளம் ஆலயத்திற்கு அதிகம் கிட்டியிருந்தமையால் இரதோற்சவத்திலன்று தேர் ஓடுவதற்கு வீதி அகலம் போதாதிருந்தது பற்றி, அப்போது வடமாகாண ஏசண்டராயிருந்த சேர் வில்லியம் துவையினம் என்பவர் உதவியைக் கொண்டு குளத்திலொரு பாகத்தை மூடி ஒடுக்கமாயிருந்த வீதியை விசாலமாக்கி விட்டார்.
இக்காலத்திற் கோயிற் பூசை செய்து வந்தவர் வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரையவர்கள். இவ்விதமே ஏறக்குறைய நுரற்றைம்பது வருஷகாலம் பூசைசெய்து வந்த சைவக்குருமார் கோயிலைவிட்டு நீங்கிப் பிராமணருக்கு இடங்கொடுத்தனர்.
பிராமணருள்ளே முதற் பூசகராயேற்பட்டவர் பிரம்மஸ்ரீ சீதாபதி ஜயரவர்கள் இங்கு ஏறக்குறைய ஜம்பது வருஷகாலமாய் விநாயகரது நித்திய நைமித்திகங்களை நடாத்தி வந்து மூன்று வருடங்களுக்கு முன் சிவலோகஞ் சேர்ந்தனர். இவருடைய குமாரர்களே விளங்குகின்றவர்கள் மேற்படி ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களதும், ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களதும் பிள்ளைகள்.

பூசைகளும் மகோற்சவமும்

இவ்வாலயத்தில் மூன்றுகாலப் பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.
வருசத்திலே பங்குனிமாதத்தில் உற்சவம் ஆரம்பமாகி தமிழ்ச் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரதோற்சவமாகக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை பதினெட்டு நாட்கள் உற்சவமும் 2004 உற்சவத்தையடுத்து புனரமைப்புச் செய்வதற்காக முற்றாகத் தகர்த்தப்பட்டு மீண்டும் 2014ஆண்டு புதுபொலிவுபெற்று இப்போது பூசகராய் விளங்குகின்றனர்.
48 நாட்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைணடுத்து 25 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல், பிள்ளை விற்று வாங்கல், மடிப்பிச்சை எடுத்தல், பட்டுச் சார்த்தல், தேவாரம் ஓதுதல், வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மாத்திலும் அமாவாசையை அடுத்து வரும் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விஷேட பூசைகள் நடைபெறும் ஆவணி சதுர்த்தி தினமானது பெருமானது திருசந்திதானத்தை பார்ப்பவர் கண்களை பூரிக்கச் செய்கின்றது. இச்சதுர்த்தி ”தேவர்கள், முனிவர், சித்தர், கந்தருவர் யாவரும் வந்திவனேவல் செய்திடும்நாள்”
கார்த்திகை மாதத்தில் விநாயகவிரதம் ஆரம்பமாகி இருபத்தொரு நாட்களாய் பிள்ளையார் கதை வாசிக்கப்பட்டு கடைசி நாளிலே கஜமுகாசூரசங்காரம் நடைபெறும்.